Monday, December 9, 2013

மழைக்கால நாளொன்றில்


ஏதோ ஒரு மழைக்கால நாளில்
முதன் முதலாய்
உன்னுடன் நான்
தனிமையிலிருந்த ஞாபகம்...

நீ ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாய்
என்னால் மட்டும் ...

ஏனோ பேச முடியவில்லை
ஏனடி இப்படி பேசிக்கொண்டேயிருக்கிறாய்
கேட்கவும் தோன்றிற்று எனக்கு
ஏதோ இனிமையில் கேட்க மறந்து
மயங்கிப் போயிருந்தேன் நான்...

மழைச்சாரலுக்கு இதமாய்
தேநீர் ஒன்று கேட்டேன்
அந்நேரத்தில்
நீ கொடுத்த
அந்த கருப்பு டீக்கு
இதுவரை இணையேதுமில்லையடி...

ஏனோ நீ திடுமென புள்ளிமானாய் ஓடினாய்
மழையில் நனையாதே
சொல்ல வாயெடுத்த ஞாபகம்...

வீட்டு தோட்ட செடியிலிருந்து
பூவொன்று பறித்து வந்தாய்
ஒற்றைக்கையில் பூவுடன்
நீ திரும்பி நின்றது
வெட்கத்தினால் இல்லைதானே!

நீ பறித்த அந்த பூவை
எந்தன் கைகளினால்
எந்தன் பாவையின் கூந்தலில்...
ஈரமான அந்த கூந்தலை
வருடிக்கொண்டேயிருக்கத்தான் ஆசை
பேசவே யோசித்த என்னை - நீ
என்ன நினைப்பாயோ...

மாற்றாய் நீயோ
கூந்தலை முன்னே விட்டு
என்னை இறுக அணைத்து அளித்த
அந்த முத்த மழைக்காய்
உயிரையும் விட்டு விடலாம்...

எப்போதும்
எந்தன் தனிமைகளிலெல்லாம்
கண்முன்னே வந்து போகும்
உந்தன் முத்த மழை...

Friday, February 15, 2013

நிசங்கள் நினைவுகள்

நிசங்கள்
நினைவுகள்
உன்னில் நானும்
என்னில் நீயும்
மிதக்கும் நீற்குமிழாய் போன
நினைவுகள்
என்னை
யாரென கேட்கும் நீ
நிசங்கலாய்...

Sunday, June 10, 2012

இரட்டை வாழ்க்கை


காலம் எவ்வளவு கொடுமையானது
காதல் கொடுமையின் கொடுமை
மணமாகி மகனாகியும்
மறக்க முடியவில்லைதான் உன்னை
மன்னவனிடமும் கூறவில்லை
கூறினால் குறைதான் வாழ்வு
உன்னுடன் வாழ்ந்த
அந்த பசுமையான நாட்கள்
என்னுள் பச்சை பசேலாய்
உன்னை நான்
நினைக்காமல் இருக்கத்தான் பார்க்கின்றேன்
தோற்றுத்தான் போகின்றேன்
நினைவெல்லாம் நீயாகிப்போனதால்
உன் முதல் மாத சம்பளத்தில்
உனக்குள்ளிருந்த எனக்கு நீ அளித்த
அந்த மோதிரம் மட்டும் இன்னுமென் விரலில்...
நினைவில் நீ
நிசத்தில் அவன்
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நான்...

Saturday, April 7, 2012

இதற்கு பெயர் காதல் என்றால்

நீ
எங்கோ பார்த்து
எதற்காகவோ சிரித்துபோவதை
என்னுடன் சிரிப்பதாய்
சிலிர்க்கின்றேன்...


இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...


நீ
ஏதோ ஒரு குழந்தைக்கு
முத்தமிட்டு செல்வதால்
என் உதடு வறட்சியிழப்பதாய்
உணர்கின்றேன்...


இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...


நீ
பேசாத வார்த்தைகளுக்கும்
அர்த்தம் புரிந்து கொண்டதாய்
சிரித்துகொள்கின்றேன்...


இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...


நீ
என்னை கடந்து போகும்
ஒரு நொடிக்காய்
மணிக்கணக்கில் காத்து நிற்கின்றேன்...


இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...

Sunday, March 25, 2012

வலி

என் பேனா முனைக்கு தெரியும்
எனக்கும் உனக்கும் உண்டான
காதலின் வலி...

Wednesday, November 9, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சம் வலிக்கின்றது - இந்த
மானுட மாண்புகள்
மறித்து போவதை எண்ணி!
பசி பட்டினி சாவினில்
நாம்தான்
முதலிடமாம்....

பல 
அம்பானிகளும் 
மிட்டல்களும் - நிறைந்த 
நாம்தான் 
இச்சாபக்கேட்டிலும் 
முதலிடமாம்...

வலியோர் வலியோராகவும்
எளியோர் எளியோராகவும் 
எண்ணினால் 
கண்களில் கண்ணீர்...
கண்கள் 
கலங்கி கலங்கி 
கண்ணீரும் வற்றிப்போயிற்று...
கண்ணீர் சிந்தவும் 
வழியில்லாமல் 
கண்காணா வீதிகளில் 
சடலங்களாய்...

வருடந்தோறும் 
வனப்பான புதுமைகள் 
நிதியறிக்கைகளில் மட்டும்...
யாருக்கு என்ன பலன்? - அந்த 
நீதியற்ற அறிக்கைகளால்...
உயிரே ஊசலாடும்போது 
ஊஞ்சல்களுக்கும்  
நாய் ரொட்டிகளுக்கும் 
விலையில் மலிவாம் 
பாரதியின் பாதியை மட்டும் 
பார்த்திருப்பனரோ!  

"வல்லரசு நாடுகளின் பட்டியலில்
விரைவில் நாம்"
மந்திரிகளும்
மக்கள் பிரதிநிதிகளும்
அறிக்கைகளில் மட்டும்...
மானுடமே இல்லாமல்
பட்டியலில் இந்தியா...
நெஞ்சு பொறுக்குதில்லையே!

பசி தீர்த்து மனிதம் காக்க
வழி காணாமல்
உயிர் தீர்த்து
ஆயுதம் காக்கும் வழியில்
என் இந்தியா...
என்னே கொடுமை!
பாதுகாப்பிற்கு
பல்லாயிரம் கோடிகளாம்...
யாரின் பாதுகாப்பிற்கு?
மானுட சதைப்பிண்டங்களுக்கா?
நெஞ்சு பொறுக்குதில்லையே!